ஞாயிறு, 30 நவம்பர், 2014

வாழ்க்கை ஒரு தொடர் (கல்வி) தேடல்.

இன்றைய தினம் நான் வாழ்த்த நினைத்தவர்களை எல்லாம் இல்லை வாழ்த்த வயதில்லை மானசீகமாக வணங்க நினைத்தவர்களை மானசீகமாக காலையிலேயே வணங்கிவிட்டாலும், எழுத நினைத்ததை எழுதாமல் உறங்க முடியாது போலும்.. இன்று கல்லூரியில் சற்று வழக்கத்துக்கு மாறாக பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடக்கும் ஒவ்வொரு மாணவ மனைவியின் ஆசிரியர் தின வாழ்த்துக்களை பெற்று நன்றிகளை சொல்லி நகர்கையில், ஏதோ ஒன்று மனதின் ஓரத்தில் உறுத்தத்தான் செய்தது. இவர்களுக்கு எதை நான் கற்றுக்கொடுத்து விட்டேன். வாழ்வியலின் அடிப்படையேனும்?? கணிப்பொறியின் பரிணாம வளர்ச்சியும், பயன்பாடும், மென்பொருள் எழுதும் மொழிகளின் பரிட்சயமும் இவர்களை மனிதர்களாக, வாழ்க்கையை புரிந்தவர்களாக ஆக்கி விடுமா என்ன?? நிச்சயம் இல்லை. சற்றே பின் நோக்கி நகர்ந்து என் வாழ்விலும் நான் மாணவனை இருந்த போது என் ஆசிரியர்கள் எனக்கு எதை எப்படி கற்றுத் தந்தார்கள் என்று பார்த்தல், பெரும்பாலானவர்கள் அதையே தான்  செய்திருக்கிறார்கள்.
 
 எத்தனை ஆசிரியர்களை நாம் நினைவில் கொண்டிருக்கிறோம்.. ஆண்டுகள் கடந்த பின்னும் எவரேனும் நம் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார் எனில் நிச்சயம் அவர்கள் பாட புத்தகங்களைத் தாண்டி வாழ்க்கைக்கான புரிதலையும் வழி காட்டுதலையும் சர்வ நிச்சயமாக போதித்திருக்க வேண்டும். அப்பட்டமான உண்மை. எனக்கு படித்த பாடங்களை நினைவிருக்கும் அளவிற்கு, அதை சொல்லித்தந்த பலர் அத்தனை தெளிவாய் என் மனதில் இல்லாமல் போனதற்கு அதுவும் காரணமாய்  இருக்கலாம்.

வாழ்க்கையில் அதை செயலாக்கும்வரை  எந்த ஒரு கல்வியும் முழுமை அடைவதில்லை.

நிதர்சனமான உண்மை, இங்கு போதிக்கப்படும் பாடங்கள் பல வெறும் பாடங்களாகவே இருக்கின்றன, பலதை நாம் உபயோகிப்பதே இல்லை அல்லது அதை வாழ்வில் எப்படி உபயோகிப்பது அல்லது அதன் பயன் என்ன என்பது போதிக்கப்  படுவதில்லை.

கல்வி வெறும் கற்றுத் தேர்வதர்க்கான கட்டமைப்பாக்கப் பட்டதாய் உணர்கிறேன். தேர்வு நிலை தாண்டி அதைப்  பற்றி யாரும் சிந்திப்பது இல்லை.

கற்றுக் கொடுப்பவர்கள் எல்லாம் ஆசிரியர் ஆகிவிடுவதில்லை, நாம் யாரிடம் கற்றுக்கொண்டு அதை வாழ்வில் புகுத்தி உணர்கிறோமோ அவரே நம் ஆசிரியர் ஆகிறார்.

இப்படி எனக்கு அமைந்த சில குருமார்களை இங்கு நிச்சயம் நான் வாழ்த்தி வணங்கியே ஆகவேண்டும்.

எனது தொடக்கப் பள்ளி வாழ்வில், நிச்சயத்து கூற முடியும் நான் வெகு சுமாரான மாணவனாகவே இருந்தேன், அதிலும் தமிழில் என்னை போல் எழுத்துப் பிழை செய்ய யாராலும் முடியாது.

என் ஆசிரியர்களை விட அதிகமாக எனக்கு கற்றுக்கொடுத்தவர் என் அன்னை.

கணிதத்தை எனக்கு நாட்டம் வர என்னை ஊக்கப்படுத்தி போதித்தவர் என் தந்தை.

நடுநிலைப் பள்ளியில் எனக்கு ஆர்வமும், அதே சமயத்தில் துடிப்புடன் எதையும் எதிர்கொண்டு வெல்ல என்னைத் தூண்டியவர்கள், தாமோதிரன் அய்யா, சுதந்திரமணி அம்மா இவர்கள் இருவரையும் வாழ்வுள்ள வரை மறக்க இயலாது. அன்பினால் எதையும் சாதிக்க இயலும் என்று உணர்த்தி, பாடத்துடன் வாழ்விற்கான பால பாடத்தையும் சேர்த்து சொல்லிக் கொடுத்தவர்கள் இவர்கள்தான்.

பின் பத்மாவதி அம்மா, எங்கள் விளையாட்டு ஆசிரியர். நான் வெற்றி பெருகிறேனோ இல்லையோ, அணியை வழி நடத்த, துவண்டு போகும் அணியினருக்கு ஊக்கமளிக்க, தோல்வியின் விழும்பிலும் துவளாமல் நின்று எதிராளியை மிரள வைக்க, தோற்றாலும் அதிலும் வெற்றிக்கான படிகளை கற்றுக்கொள்ள சொல்லிக்கொடுத்தவர். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல வாழ்வில் துவளும் ஒவ்வொரு நொடியுலும் எவ்வளவு உதவும் என்று பின்னாளில் அனுபவம் கற்றுக்கொடுத்தது வேறு கதை.

மேல்நிலை பள்ளிக்காலத்தில் நானே அறியாமல், பள்ளியின் அத்துனை ஆசிரியர்களும் என்மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். பள்ளியின் மாணவர் தலைமை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ தலைமை, இன்னும் எல்லாவற்றிலும் என் பங்களிப்பு இவை எனக்கு கற்றுக் கொடுத்தவைகள் ஏராளம். அங்கு நான் கற்றுக்கொண்டது வாழ்வின் பல இடங்களில் இன்றும் உதவாமல் இல்லை.
என்னை முன்னிலைப் படுத்த படுத்த எனக்கான பங்களிப்பு என்ன, எப்படி அதை அணுக வேண்டும், தலைமை ஏற்றால் தலைக்கணம் வந்து விடக்  கூடாது,  சக மனிதர்களோடு இணைந்து இயங்க வேண்டும். இன்னும் எத்தனையோ பாடங்கள். இதில் பல விசங்களில் எனக்கு முன்னோடியாக இருந்து இன்றும் தொடர்ந்து என்மீது என்பை சொரிந்து வரும் என் பள்ளி கால மூத்த மாணவர் Adalarasu Anbalagan அண்ணாவை இந்நாளில் நினையாமல் இருக்க முடியாது.

கல்லூரி என் வாழ்வை திசை மாற்றிய காலங்கள், எனக்கு பள்ளி தந்த அனுபவம் எவருடனும் எளிதில் பழகுதல், அன்பை பரிமாறுதல் அரசு பள்ளி எனக்களித்த வரம் அது. இருப்பினும் ஆங்கிலம் என்னும்போது ஒரு அரசு பள்ளி அதிலும் தமிழ் வழி கல்வி கற்ற சாதாரண மாணவனை விட பின் தங்கியே இருந்தேன். எனக்கு ஆர்வம் ஊட்டி முதலாம் ஆண்டுடன் ஆங்கிலம் மொழிப்பாடமாக இல்லை என்றாலும் எங்களை ஆங்கிலத் துறையோடு தொடர்ந்து இணைந்திருக்கச் செய்து, அம்மொழியில் திறம் பெறச் செய்த ஆசிரியை Narmadha Ram. மொழியை மட்டுமல்லாது வாழ்வியலையும், பண்பையும், நேர்மையையும் போதித்தவர் இவர்.

கணிப்பொறி அறிவியலை பள்ளியிலிருந்து படித்தாலும், அதில் ஆர்வத்தை ஏற்படுத்தி கற்க கற்க இன்னும் வேண்டும் என்று தேடி ஓடவிடும் மனோநிலையை தந்து, எங்களுக்கு குருவாய் மட்டுமல்லாது நண்பனாய் இருந்து நாங்கள் செய்யும் தவறுகளை பகிரங்க படுத்தாமல் ஒரு தாயன்போடு வழி நடத்திய எங்கள் இளங்கலை துறைத்தலைவர் திரு. Navaneetham Periyasamy அவர்கள் படத்தோடு நின்றுவிடவில்லை. சரியான நேரங்களில் சரியான பாதையை காட்டி, எங்களை வழி நடத்தியவரும் கூட. என்றும் தன்னான் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்து சீர் தூக்கி விடும் மனோ நிலையை கற்றுத் தந்தவர்.

முதுகலையில் சேரும்வரை சராசரி மாணவனாய் இருந்த என்னை, கல்லூரியில் எனது பாடத்திட்டத்தில் முதல் மாணவனை வர என்னை தேற்றியவர்கள் அநேகம் பேர். யாமினி மேம் துறைத் தலைவர், Chitra Ganesan, கீதா மேம், சாமு மேம் இவர்கள் என்னை மாணவனாய் நடத்தியதை விட தம்பி என்று அழைத்த நாட்கள் அதிகம்.


கல்லூரி நாட்களிலும், பின்னாளிலும் என்னை நான் உணர வாழ்வை புரிந்துகொள்ள, இன்றும் என்னை வழிநடத்தும் சிலரை என்ன்னால் சொல்லாமல் இருக்க முடியாது.
காரணம் பாட புத்தகங்களை விட வெளியேதான் வாழ்க்கைக்கான பாடம் விரிந்து கிடக்கிறது என்று வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் உணர்த்தப்பட்டிருக்கிறேன் நான், எனது ஆசிரியர்களாலும், இவர்கள் போல் உள்ள  நண்பர்களாலும். SatheeshBabu Thiruvengadam, Sujith Jayaprakash, Kathir Sujith, Dhanabal Subramanium.

உண்மையான ஆன்மீகம் எதுவென்று எனக்கு உணர்த்தி, அதை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி அதன் உட்கருத்தை உணர்த்தி, வாழ்வதில்தான் வாழ்க்கைக்கான அனைத்து அர்த்தங்களும் புதைந்து கிடக்கிறது என்ற தத்துவம் உணர்த்தி, என்னை மெய் ஞானம் தேடி நடை பயிற்றுவித்த என் குருமார்கள் Madhusudhanan Podhuval, Dheva Subbaiah,நாராயணசாமி (Teacher @ Vazhum kalai mandram), ஞானானந்தா சுவாமிகள், ஞானானந்த வள்ளலார் கோட்டம்.

இன்னும் எத்தனையோ பேர் தினம் தினம் புது புது அர்த்தங்களை வாழ்விற்கு வழங்கி அதன் மூலம் வாழ்விற்கான சூட்சமங்களை தேடி செல்ல வழி அமைத்து தரும், எனக்கு வாழ்வியலை கற்றுத் தரும், வாழ்வை வளமானதொரு மனோநிலையில் வாழ கற்றுக்கொடுக்கும் ஒவ்வொரு குருவிற்கும் இதை காணிக்கையாக்குகிறேன்.

அவனின்றி ஓரணுவும் அசையாது.

எங்கும் நிறைந்து எல்லையற்றவனாய் இருந்தும்  ஏதுமற்றது போல் சலனமற்று, நிசப்தமாய் ஒவ்வொருவர் வாழ்விற்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கும்,ஏதோ ஒரு வகையில் நம்மை இணைத்து நம் வாழ்வினிர்க்கு அர்த்தமாகிப் போன எல்லாம் வல்ல இறையை. ஆதி குருவாம் சற்குருநாதனின் திருவடிகள் போற்றி.

எல்லாம் நிறைவாகட்டும்.

கருத்துகள் இல்லை: