ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

சரணாகதி


ஆணவம் கன்மம் மாயை கொண்ட

கள்வன் உள்ளிருக்கும்வரை

கயிலையம் பதியோ

கங்கா தீர்த்தமோ

காசி மஹா மயானமோ

உனை கரையேற்றுவது கடினம்...


சொல்லவொனா சோதியின்

காணவொனா காந்தி

உள்ளிருந்து பிரகாசிக்கும் தருணம்

எல்லைகளற்றவனின் எல்லையில்

நீ எங்கிருந்தாலும்

அங்கிருந்தே கரையேற்றப்படுவாய்...


ஆத்ம ஞானம் உண்டாகும்போது‌

உள்ளிருக்கும் ஆதிசோதி

சுயம் பிரகாசிக்கத் தொடங்கும்..


ஆத்ம ஞானம் அது ஈசனின் பாதம்.

ஈசனின் பாதம் பற்றும் ஒற்றை வழி

அஹங்காரம் விட்டொழித்து

குருபாதம் பணிதல் ஒன்றே...


குருவை எங்கே தேடுவது??

உன் பிறப்பு உறுதியானபோதே

பிறந்திருப்பார் உனக்கான குரு..

அவர் யார் என நீ அறிய‌

அவசியங்கள் இல்லை.

ஏதுமற்றவனை எல்லையிலா வெளியில்

தேடித் தேடித் தேடல் தெளிவு பெற்று

புறமுக பற்று அந்தர்முகமாகும் தருணம்

சரீரச் சார்பு நீங்கி

சத்தியம் தெளியும் வேளை

உன்னோடான குருவின் ஈர்ப்புவிசை வலுப்பெறும்.

ஏனெனில் ‌உருவங்கள் வேறுபட்டாலும்

உள்ளிருக்கும் உருப்பொருள் ஒன்றென்பதால்.

உன்னுள் இருந்து உனை இயக்கும் ஒன்று

உன் முயற்சியேதுமின்றியே உனை குருபாதம் சேர்க்கும்..

குருவின் தேவையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்

சத்தியம் தெளிந்த சரணாகதி..

அதைப் போதித்து உனை அவர்நிலை உயர்த்தவே

ஜென்மங்களாய் உனைத் தொடர்கிறார்...


எனக்காக‌ப் பிறப்பெடுத்து

உலகத்தின் இன்ப துன்பங்களை அனுபவித்து

எனை உயர்த்த என்னுள் உயிர்த்திருக்கும்

என் குருநாதரின் பாத கமலங்களே சரணம் சரணம்..


குருவே தாயுமானவர்

குருவே தந்தைக்கும் நேர்

குருவே சற்குரு நாதனும்

குருவே தெய்வமும் ஆகுமே...


குருவே சரணம்...

என் குரு

 


அம்மையும் அப்பனும் ஆக்கிய உடலிது

மறலி தீண்டிடில் மண்ணது உண்ணுமே.. 

மன்னவன் தாளது கண்டிடா சீவன்தான்

மாண்டே பிறந்திடும் பின் மாண்டிடும் பிறவிக்காய்...

மறலியும் பிறவியும் சுழலதைப் போலவே

சுழற்றி எடுத்திடும் பின் கழற்றி எறிந்திடும்...

நித்தமும் வாழ்ந்திடும் வாழ்வது வேண்டிடில்

பெற்றிடு நீயதை குருபக்தியின் மூலமே...

சீவனின் குருதனை சீவனே அறிந்திடும் 

சிவனிடம் பணிவதே குருபதம் சேர்த்திடும்..

குருபதம் கிடைத்தலோ எத்தகு வரமெனில்

சிவனவன் சிந்தையில் நின்முகம் காணல்போல்...

சீவன்தான் குருதனை கண்டிட்ட மறுகணம்

மீண்டுமே ஒருமுறை ஈன்றெடுப்பார் குருவுனை...

பெற்றவர் ஈன்றது மற்றநாள் தீரினும்

குருவவர் ஈன்றது அவரையே சார்ந்திடும்...

என்னிலே உறையும் இச்சீவனை ஈன்றிட்ட

குருவவர் கனிவது இயம்புவேன் கேளுமின்...

தில்லை மாநகர் ஆடிடும் நாதனின்

எல்லையற்றதோர் கருணையின் தெளிவு...

அங்கம் ஆண்டிடும் தேவி சக்தியின்

பங்கமற்றதோர் பாசத்தின் விளைவு...

கண் காணத்துடித்திடும் கயிலாய வாசர்கள்

அம்மையப்பனின் அன்பின் செறிவு..‌.

சென்ம சென்மமாய் அலைந்து திரிந்திட்ட

ஆத்ம சக்தியது அடங்கிய உறவு...

மறலி தீண்டா மெய்வழி தெய்வத்தின்

தெய்வமாக் கருணையில் வார்த்த வளர்ப்பு...

ரமண மகரிஷியின் ஞான ஒளியாம்

நொச்சூர் அண்ணனின் பாசப்பிணைப்பு...

அண்டம் முழுதும் அடக்கவல்ல

ஆத்மவித்யையின் ஞானத்திறப்பு...

விண்ணையும் மண்ணையும் ஆண்டிடும் ஈசனின்

வண்ணமாய் பூமியில் வாழ்ந்திடும் நாதனே...

என்னையும் உன்னிலே ஐக்கியம் ஆக்கினாய்

புண்ணியம் மாதவம் செய்தனோ அறிகிலேன்...

தாம் மண்ணிலே உதித்த இப்பொன்நாள்தனில் 

பணிகிறேன் சரணமாய் நின்பத மலர்களில்...

ஆற்றியும் தேற்றியும் காத்திடும் குருவுமை

பணிவதின் பயனது சேர்த்திடும் சிவபதம்..

சிவபதம் சேர்வதே சீவனின் எல்லையாம்

ஏற்றிடும் எமையுமே சேர்த்திடும் நினதெல்லையில்

பெண்...





















தமிழில் இது வெறும் வார்த்தை அல்ல

தமிழ் படைத்தோன்

அறிந்த பெண்ணின் பெருமை.

ஆண் வெறும் உயிரும் மெய்யும் தான்.

அவன் மெய் உயிர் சுமப்பதில்லை.

ஆனால் பெண்ணிற்கு அது போதாதே!

மனித சமுதாயத்தின் கருப்பை அல்லவா அவள்.

பிறப்பெடுக்கும் பொழுதே தன் மெய்யில்

உயிர் சுமக்கும் உரிமை பெற்றவள் அவள்.

அதனால்தான் அவள் "பெண்".

உயிர்மெய்யுடன் மெய் கலந்தவள்.

மனிதம் மலர பெண்தான் ஆதாரம்.

மனிதம் வளர பெண்தான் வலிமை.

மனிதம் உயர பெண்மை காப்போம். 

பெண்மை போற்றுதும்.

பெண்மை போற்றுதும்.

உயிர் உள்ள வரை 

"உன் மெய்" போற்றுதும்.

உன் மெய் என்பதும்

ஒரு பெண்ணின் உதிரம்.

உண்மை அறிந்தோர்

பெண்மை போற்றுதும்.

உண்மை மறந்தோர்

உன் மெய் உணர்வீர்.

என் வாழ்வில் நான் அறிந்த

எல்லா பெண்களுக்கும் சமர்ப்பணம்...

காதல் எனைக் கொண்ட நாள்








பதின்மம் தொட்ட நாள் முதலாய்

ஆண்டுகள் பல கடந்தேன்

நெஞ்சம் நிறைந்த காதலுடனும்

கொஞ்சும் கவிதை மாலையுடனும்...

ஒரு காதலியைத் தேடும்

அவசரமோ அவசியமோ

என்னை ஆசைக் கடலில்

அமிழ்த்தி விடாமல்

வாஞ்சையோடு வாழ்வெனைக் 

கவனித்ததின் காரணம்,

பின்னொரு நாளில் 

காலமெல்லாம் எனைக்

காதலால் மட்டுமே ஆளவிருக்கும்

அன்புள்ளமொன்றை 

என் வாழ்வின் துணையென

வாழ்வின் வழியதனில்

கண்டெத்திய நேரம்

உறவுகள் ஒன்றுகூடி 

உலகறிய உன் கரம் பிடிக்க

நிச்சயம் செய்தநாள் இது..

எத்தனை வாஞ்சை என்மீது

இக்காதலுக்கும்  இவ்வாழ்வினுக்கும்..

கவிதைக் காதலனுக்கு

கவிதையாய் ஒரு காதலியை

காதலர் தினத்தன்று

முதன்முதலாய் கரம் பிடிக்கும்

திருநாளை ஈந்தளிக்க...

இது நான் காதல் கொண்ட நாள் அல்ல.

காதல் எனைக் கொண்ட நாள்.

பிரபஞ்சம் நிறைந்த காதலால்

தினம் தினம் எனைக் கொண்டாடும்

என் அன்புக் காதலினாலான மனைவியே.

இதோ வாழ்வு எனக்களித்த பொக்கிசத்தின் கரம் பற்றி 

ஐந்தாம் ஆண்டில் அடிவைக்கிறேன்,

அனுதினம் அதிகரிக்கும் காதலுடன்..

உன் அன்பெனும் ஆளுகையில்

வாழ்வெனும் கவிதையை மூச்சிருக்கும்வரை

நேசித்து வாசிக்க வாழ்ந்திருப்பேன்..

என்றும் உனக்கான காதலுடன்.

என் கா(லமே)தலே...

எனைத்  தனக்குரியவனாக்கி
உயிரை சொந்தமாக்கி கொண்டவளுக்கு.,
கரம்பிடித்த நாள் முதலாய்
எனக்காகவென்றே எல்லாம் செய்தாய்,
உனக்கென விருப்பங்கள் இருந்தாலும்
அதை எனக்கென திருத்தி நிகழ்த்திக் கொண்டாய்,
என் எல்லா அசைவுகளிலும் உனக்கான
பங்களிப்பை தந்து என் வாழ்வின் பாதியானாய்,
நம் பிள்ளையை ஈன்ற பொழுதில் 
உயிர் ஒடுங்கி மீண்டெழுந்த தருணம்
நீயும் எனக்கோர் குழந்தையானாய்,
வாழ்வென்றால் மகிழ்வு மட்டுமா
வந்த சங்கடங்கள் மாய விட்டுத்தந்தே
ஓரோர் முறையும் எனை வெற்றிகண்டாய்,
முதன்முதலாய் கண்டபோதே உளம்புகுந்து
உனக்கென உரித்தான அரியனையை
சொந்தமாக்கிக் கொண்டவளே
யாரோவாகி இருந்து வாழ்வில் நுழைந்த
மாத்திரத்தில் நானாகிவிட்டவளே,
என்ன செய்தேன் இதுவரை உனக்காக..
என்ன செய்திருந்தாலும் அது அத்தனையும்
போதாது என்றே மனம் மருவிக்கெண்டிருக்கிறது.
எனக்கு வாழ்வை அள்ளி  அள்ளிக்  கொடுப்பவளே
உனக்கு எதைக் கொடுத்தால் ஈடாகும்.
எனையே கொடுத்தும் இன்னும் இன்னும்
ஏதாவது உனக்குத்  தர உரக்கச்  சத்தமிடும்
மனதிடம் எப்படிச் சொல்வேன்,
ஒருபுறம் நீ அவளுக்காக உருகிக்கொண்டிருக்க
வாழ்வின் வேகத்திற்கு நுரைக்க நுரைக்க
ஓடிக்கொண்டிருக்கும் புத்தி 
அவள் பிறந்தநாளை மறந்ததென்று.
எப்படி மன்னிப்பாய் இந்த 
வெட்கம் கெட்ட புத்தியை. 
காதலால் ஓர் உலகம் செய்து
அதில் யாதுமாகி நீயே நின்று
என் வாழ்க்கையாகி எனை வாழவைக்கும்
என் உயிரான உறவே
இந்நாளும் எந்நாளும் இன்பம் ஒன்றே உனைச்சேர 
எல்லாம் வல்ல இறையவனை 
உனதாகிவிட்ட உயிரதனை 
சமர்பித்தே வேண்டுகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் கா(லமே)தலே...

அழகுக்கு ஓர் அணிகலன்



தன் தங்கை மாரூட்டி வளர்த்த தங்கச்சிலை 
வலி தாங்குமோ தாங்காதோ எனப்  பயந்து பயந்து
பட்டும் படாமலும் தலை அழுத்தி
ஆயிரம் பிஞ்சுத் தலைக்கு மேல் கண்டு
பஞ்சடைத்த கண்கள் கொண்ட நாவிதரை
பாத்து பத்திரமா காயம் படாம எடுங்க
எனப்  பல முறை பலபேர் சொல்லி
பிஞ்சுக்கால்கள் நெஞ்சுதைக்க
பஞ்சுவிரல்கள் சிகைபிடிக்க
கடைவிழியில் நீர் வழிய
சக்தியெல்லாம் சேர்த்துக்  கத்தியழும் மருமகளை
சமாதானப் படுத்த என்னவெல்லாமோ செய்து
முடிவில் முடியெடுத்து முடிக்கையிலே 
கலங்கித்தான் போயிருக்கும் சில சோடிக்  கண்ணுகளும்.
குட்டித்தங்கம் குளித்துமுடித்து புத்தாடைதானுடுத்தி
சந்தனம் பூசி சமாதானம் ஆகி வரும்வேளை
வந்த சொந்தமெல்லாம் சூழ்ந்திருக்க
மாமனும் அத்தைகளும் அவரவர் பங்கிற்கு
சீரெடுத்து வகைப்படுத்தி வரிசைவைத்து
தங்கத்தோடோடு காத்திருப்பர் 
கண்மணியே உனக்குக்  காதுகுத்த.
சிரிச்சு விளையாண்டு வேடிக்கை பார்க்க வைத்தே
முதல் காது குத்திடுவர் நீ அசந்த நேரம் பார்த்து.
ஒத்த காது தோடோட சத்தமிட்டு நீயுமழ
மாமன் மடியழுத்தி தாத்தா தலைபிடிக்க 
மான்குட்டியே உனக்கு மறுகாதும் குத்திடுவோம்.
அழகுத் தோடோடு அழுகும் உனைப்பார்த்து
வந்தசனம் உச்சுகொட்டும், பின் வாயார வாழ்த்துச் சொல்லும்.
காதாடும் கம்மலுடன் கண்ணாடி நீ பார்த்து
அழகாய் கண்சிமிட்டி அழகு காட்டையில
அந்த அழகே வெட்கப்படும் செல்லக்கிளி உனைப்பார்த்து.
ஆயிரம் பெயரோடு எமைக்காக்கும் குலசாமி
சிவ ஆராத்யா என நாங்கழைக்க அனுப்பிவைத்த தங்கரதம்
உனக்கு காதுகுத்த ஊரழைக்கும் ஆசைகொண்டு
நிகழ்வின் நிழல் கண்டு வடித்துவைத்த மடல் இதுவாம்.