புதன், 16 மார்ச், 2022

காதலோடு வாழ்வோம் -5



 
உனக்காக நான் எழுதிய ஆயிரம் கவிதைகளில் 
சொல்லாத காதலெல்லாம் உனக்கான காத்திருப்புகளின்
பேரமைதியில் விசும்பல்களாய் நிறைந்து கிடக்கிறது .
என் கவிதைகள் அத்தனை உரத்துக் கத்தியபோதும் 
கேட்காத உனக்கு என் பேரமைதியின் விசும்பல்கள்
புரிந்து விட  சாத்தியங்கள சாத்தியமாயில்லை.
இருந்தும் உனக்கான காத்திருப்புகள் நீளும், 
காதல் ஒரு நாள் உன்னையும் சூழும்,
அன்று நீ இதுவரை கண்டுணரா உணர்வுகள் 
இதயம்தனை ஆட்கொண்டு திக்குமுக்காட செய்யும் 
அன்று உனக்கான  என் கவிதைகளைப் படி 
மெல்லப் புரியும் அவை காகிதத்தில் 
சிதறிய மைத்துளிகள் மட்டுமல்ல என்று,
அவை உன் கண் மை கலைத்து
காகித மையோடு கலந்துவிடும் நேரம்
புரிந்து கொள், நீ உண்மை உணர்ந்தாய் என்று,
இதுதான் காதல், வெறும் காதல்.
ஆம் அந்தக் காகிதம் நிறைத்ததெல்லாம் 
உன் மீதான என் காதலின் 
கரை கொண்ட கிளிஞ்சல்கள் மட்டுமே.
கடல் இன்னும் அப்படியே இருக்கிறது.
உனக்கான காத்திருப்புகளின் விசும்பல்களாய்.
கடல் கொண்டும் கனியாத காதல்,
உன் இமை கொண்ட நீரின் தீரத்தில் 
தானாய்க் கனிவது காண் என் சகியே.
அன்று வா, நீ படித்த கவிதைகளில் 
உணராத காதலை எல்லாம் 
என் மௌனங்கள் சத்தமாய் உரைப்பதை 
இதயத்தின் வாயிலில் உணர்வாய். 
அதுவரை காத்திருக்கிறேன் நான்.
உன்னைப் பற்றி எந்த ஒரு கற்பனைகளுமற்று, 
நீ யார், எங்கிருக்கிறாய் என் எதைப் பற்றியும்  அறியாமலே, 
வெறும் காதலுடன் மட்டும் காத்திருக்கிறேன். 
காதல் சிறு வார்த்தைதான் ஆனால் 
அது பிரபஞ்ச இயக்கத்தின் அச்சாணி என்பதை உணர்ந்து 
என் பிரபஞ்சத்திற்க்காய் காத்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: