ஞாயிறு, 15 நவம்பர், 2015

காதலோடு வாழ்வோம்-3



சில கவிதைகளை
முடிக்கும் தருணங்களில்
மனம் நொந்ததுண்டு
அவளுக்கு கொஞ்சமேனும்
தமிழ் படிக்க
தெரிந்திருந்திருக்கலாம் என்று.
எத்தனையோ இதழ்களால்
வாசித்து நேசிக்கப்பட்டு
இதயத்தில் அரியணையிட்ட
அந்த வார்த்தைகள் எல்லாம்
அவற்றின் பிறவிப்பயனை
அடையவே இல்லை என்பது
எனக்கும் அந்த கவிதைக்கும்
மட்டுமே தெரிந்திருக்கும்.
நின் இதழ் தழுவா
வார்த்தைகள் எல்லாம்
பிறந்தும் உயிர்ப்பில்லா
பிண்டங்களாய் என்
இதயப் பிரதேசத்தில்
சமாதியாக்கப் பட்டதென்று
அறிவாயோ என் காதலே.... 

:- கௌதமன் ராஜகோபால் 

காதலோடு வாழ்வோம்-2





இங்கு சில காதல்கள் மட்டும்
கல்யாணத்தில் முடிந்துவிடுகிறது.
மற்ற எல்லா காதல்களுமே
காலங்கள் கடந்தும்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இது வரமா சாபமா..??
அதையும் நீயே சொல்
களங்கமற்ற என் காதலே!!

:- கௌதமன் ராஜகோபால்

காதலோடு வாழ்வோம் -1



அந்த கல்லூரியில் அன்று
உனக்கு கடைசி நாள்.
விடை பெற துறை
வந்த போது இறுதியாய்
என்னிடம் வந்தாய்.
நிமிட அமைதிக்கு பின்
மாலை கிளம்பும் முன்
சந்திக்க வேண்டும்
நிபந்தனையுடன் விலகிச் சென்றாய்.
அந்த பெரிய நூலகத்தில் அனேகமாய் எல்லா இடங்களிலும்
தேடி முடித்த பின்
என்னிடம் வந்தாய்
பொய்க் கோபம் காட்டி..
நீ வந்து நிற்பதறிந்தும்
புத்தகத்தினுள் புதைந்து கிடந்தேன்.
அருகிருந்த இன்னொரு புத்தகத்தை
உன் கரம் நாட
அடுத்து நீ என்ன
செய்ய போகிறாய் என்பது
அறிந்தே இருந்ததால்
சட்டென கரம் பற்றினேன்.
மறு கரத்தால்
என் சிகை பற்றினாய்
பின் செல்லமாய்
தலை கலைத்தாய்.
அசுவாசமாய் எதிரே அமர்ந்து
கண்வழி இதயம் ஊடுருவினாய்.
சலனமற்றிருந்தேன் நான்.
இறுதி முறையாய் அன்றும்
நீ உறைத்தே விட்டாய்
எனக்காக உன்னில் பூத்திருந்த
புது மலராம் காதலை..
எதிர்பார்ப்பற்ற காதல் மொழியற்றது.
மறுமொழியற்று புன்னகைத்தேன்..
கெஞ்சலாயும் கொஞ்சலாயும் கேட்டாய்.
இன்றாவது ஏதேனும் சொல்லுடா,
இது எனக்கான இறுதி
வாய்ப்பென்றாய் வாட்டமாய்.
என்றுமில்லாமல் விழிநீர் மின்ன
உன்னை கண்ட நிமிடத்தில்
சற்றே கலங்கித்தான் போனேன்.
இருந்தும் புன்னகை மாறாமல்
மொழியதிராமல் பதிலுறைத்தேன்..
என்னைக் காதலிப்பவர்களின் வரிசையில்
இறுதியாய் நிற்கிறாய் என்றேன்..
மௌணமானாய் தலை கவிழ்ந்தாய்..
சில நிமிட பேரமைதிக்குப்பின்
விழி இறங்கிய நீரொதுக்கி
உன் இதயச் சுமைதாங்கிய
புன்னகை ஒன்றை
இலை உதிர்க்கும் மரமாய்
உதிர்த்துவிட்டு வரண்ட பாலையானாய்.
மீண்டும் ஒரு மௌணம்.
அதைக் கலைப்பது யாரென்பதில்
இம்முறை சேமிப்பை செலவிட
விரும்பா கருமியின் மனநிலையிலானோம்.
சட்டென நீயே கலைத்தாய்.
எழுந்துநின்று போகலாம் என்றாய்.
பதிலை எதிர் பாராமல்
நடக்கவும் தொடங்கினாய்.
நான் நகர்வற்றிருந்தேன்.
நான் வராததை உணர்ந்தவளாய்
திரும்பி முறைத்தாய்..
அதற்கு அர்த்தங்கள் ஆயிரம்,
அதில் முதலாவது எழுந்து வா..
கருத்தறிந்து பின் தொடர்ந்தேன்.
விடுதி முகப்பு வந்ததும்
ரயில் நிலையம் வரையேனும்
வழித் துணை வருவாயா?
மறுக்க வாய்ப்பளிக்காமல்
விரைவில் வருவதாய்க் கூறி
ஒரு மழைகால மாலையில்
முன் வாசல் புகுந்து
முற்றம் முழுதும் பரவி
பின் வாசல் துள்ளிவரும்
குளிர் ஈரக் காற்றாய்
விடுதி புகுந்து  வெளியேறினாய்.
மின்மினி பூச்சியாய் கண்கள் மின்ன
பின் இருக்கையில் படர்ந்தென்
தோள் பற்றி போவெனத் தள்ளினாய்.
இடையில் இரவு உணவுக்காய்
நிறுத்தி எடுத்த நேரம்போக
மற்ற நேரமெல்லாம் 
தோளின்மீதே சாய்ந்து கிடந்தாய்.
ரயில் நிலையமும் வந்தானது.
இத்தனை தூரம் வந்தவன்
வண்டி கிளம்பம்வரை
இருந்தாக வேண்டுமே.
நான் அடர் மௌணத்தில்
அமிழ்ந்து கிடந்தேன்.
என் மௌணம் உடைக்கும்
ஒற்றைக் குறிக்கோளுடன் நீ.
உனது ரயிலுக்கான  இறுதி
அறிவிப்பு வந்த தருணத்தில்
சட்டென தடம் மாறியது
உன் உள்ளமும் அதனால் விழிகளும்..
மீண்டும் அதே கேள்வி.,
உன் முடிவென்ன என்பதாய்...
தேர்ந்த  நடிகனாய்
புன்னகை மட்டும் உதிர்த்தேன்.
ஆழமாய் ஒரு பார்வை
என் மனதின் ஆழம்
அறிய அனுப்பப்பட்ட பார்வை.
சுற்றம் அளந்தறிந்தாய்
அருகில் ஆளரவம் அற்றிருந்தது.
எதிர்பாரா நிமிட மழையாய்
சட்டென என்மீது படர்ந்தாய்.
அந்த ஒரு இருக்கத்தில்
உன் அன்பின் ஆழமுணர்த்தி
என் நெற்றியில் ஒற்றி எடுத்த
இதழ் வெப்பம் குறையுமுன்னே
உன் பின் வந்து நின்ற
ரயிலில் ஏறிக் கண்மறைந்தாய்
என் பதிலுக்குக் கூட காத்திராமல்..
அன்று உன் ரயில் கிளம்பிய
பின்னும் வெகு நேரம்
கிளம்பாமல் அங்கேயே அமர்ந்திருந்த
கதையதனை காலமும் உணர்த்தாதிருக்கட்டும்.
நீ விட்டுச் சென்ற
பொருளொன்றை
எனையின்றி உலகரியாமல் ஏன்,
நீ கூட அறியாமல் பத்திரப்படுத்தியானது.
காதல், உன்னைக் கண்டவுடன்
உன் மீது உதித்த காதலல்ல அது.
நான் கருவாய் உதித்தபோதே
உள்ளிடப்பட்ட வாழ்வினோடு ஆன
காதலது, பிறவிப் பெருங்கடலின்
அலைகளாய்
உலகில் வாழ்வென்பது உள்ளவரை
ஓயாதடிக்கும் அலையது.
அது தாயன்பு போல்
சுய விருப்பங்களுக்கு விடுதலையளித்தது.
சுரந்த பால் தரப்படவில்லையெனில்
மார்கட்டி வலிக்குமே தாய்க்கு
அப்படித்தான் காதலும்..
ஒருவருக்காய் அது கனிந்துவிட்டால்
அதை இறக்கி வைத்தாக வேண்டும்..
இல்லை அதன் அளவற்ற
பாரத்தால் இதயம் நொறுங்கிவிடும்.
இதோ உனக்காக கனிந்த காதல்.
அமர்ந்திருக்கும் போதெல்லாம் என்பின்னின்று
தோள் அழுத்தும் உன்
பிஞ்சுக் கரங்களைப் போலவே
நினைவுகளால் என்  நெஞ்சழுத்தும்
உன் பிஞ்சுக் காதல்.
என்னை காதலிப்பவர்களின் வரிசையில்
இறுதியாய் நின்றவளே,
என் பிரபஞ்ச காதலை
ஏற்கும் தகுதியுடயவர்களின் வரிசையில்
முதலும் கடைசியுமாய் நின்றவள்
நீ  ஒருத்தி மட்டும்தான்.
உலகறியா உண்மையிது.
உன்னில் என் மீதான
காதலின் விதை விழுந்த தருணத்தில்
உனக்கான காதல் பூக்கவே
தொடங்கியிருந்தது என்னில்..
அதன் வாசம் அறிந்திருக்கவில்லை நீ,
அறிவிக்கவில்லை நானும்.
பயணித்திற்கான வழித்துணையாய் அல்ல
உன் வாழ்க்கைத் துணையாய்
இறுதிவரை உடன்வர தயாராயிருந்தேன்
உன்னை மட்டும் அறிந்திருந்த தருணங்களில்.
ஊரில் உனக்காக காத்திருக்கும்
ஒருவனை உன் மூலமே
அறிந்திருந்தேன் என்றாலும்,
நீ அறியாத கதையொன்றுண்டு,
நீ என் மீதான காதலை
என்னிடம் முதன்முறை
உறைப்பதற்கு முன்னரே
நான் அவனையும் அவனில்
உனக்காக உருவாக்கி வைத்திருக்கும்
காதலினால் மட்டுமான
கவியுலகமே கண்டு வியக்கும்
கனவுலகையும், அதில் உன்னோடு
மட்டுமே வாழ விரும்பும்
பிரபஞ்சத்தின் வாழப்படாத  வாழ்வொன்றையும்,
உனக்கே உனக்கு மட்டுமாய்
உரித்தாக்க காத்திருக்கும்
ஒரு மாபெரும் காதல் ரசிகனைக்
கண்டபின் காதல் என்பது
புரிந்துதான் போனது எனக்கு.
தாய்மை போன்றுதான காதலும்
அடைந்தாக வேண்டிய அவசியங்களற்றது.
வாழ்வின் எல்லா உணர்வுகள் போலவே
பிறந்தபோதே உள்ளிடப்பட்டது
அதற்கான தூண்டல் வரும்வேளை
தானாய் முளைத்தெழும்.
தாய்மைக்கு குழந்தையும்
காதலுக்கு காதலனோ காதலியோ
மனதின் தேவைகளே அன்றி
உணர்வுக்கு  அப்படி ஒன்றில்லை.
எத்தனை பெரிய உண்மை
உணர்த்திச்  சென்றிருக்கிறாய் நீ.
நீ என்னோடு வாழ்வதானால் கூட
இத்தனை இனபம் என்னில்
இருந்திருக்குமா நானறியேன்..
நீ பிரபஞ்சம் நிறைக்கும்
காதலோடு வாழ்கிறாய்..
உன்னால் நானும்தான்..
நீ இல்லா  நாட்களில்
அந்தக்  கல்லூரியே
வெறுமையின் பிறப்பிடமாய்பட
நான் காதலின் வேறொரு
பரிமாணத்தைத்  தேடி
எனது பயணத்தைத்
தொடங்கியிருந்தது வேறொரு கதை...
காதல் தொடரும்.. கதைகளாய்...

: - கௌதமன் ராஜகோபால்