ஞாயிறு, 30 நவம்பர், 2014

எண்ணம், செயல் மற்றும் அதன் விளைவு இதில் எது நமது?? பாகம் - 2



அனுபவம் அது கொடுக்கும் பாடம் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் தேடலுக்கான படிக்கல்கள். நோக்கம் எதுவாயினும் இறுதியில் நாம் அடைவது நமக்கானதை மட்டும் தான். இந்த நிமிடம் இந்த நிகழ்வு இந்த அனுபவம் தவிர்க்க இயலாதது. ஆம். நாம் ஆயிரம் கற்பனைகள் செய்யலாம். அதில் ஒன்று கூட நடவாமல் போகலாம். நாம் எதிர் பார்க்காத ஒன்று நடந்தேறலாம். அதற்க்கு காரணம். அதை சிலர் விதி என்பர். நான் அதைத்தான் வாழ்வென்பேன். 

வாழ்க்கை மிக மிக அழுத்தமான சூட்சும முடிச்சுகளைக் கொண்டது. அது தானை அவிழும், அதற்க்கான காரண காரியங்களை மட்டுமே நம்மைக் கொண்டு செய்விக்கும். புரிந்து கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. சில நேரங்களில் நமக்கு சில எண்ணங்கள் தோன்றலாம். சட்டென உதித்த எண்ணத்தை நாம் உதாசீனம் செய்துவிட்டு வேறு பல காரியங்களை செய்ய திட்டமிடலாம். இறுதியில் நடப்பது ஆதியில் தோன்றியதாய் இருக்கும். நமக்கே தெரியாமல் நடந்தேறும் அது. காரணம் என்னவாயிருக்கும்? ஒரு விசயத்தை நாம் தொடங்க நினைக்கையில் சட்டென ஒரு எண்ணம் உதித்து மறைகையில் அது ஆதியாய் நிற்பவனின் வழிகாட்டல் என்றுணர்க. ஆம், இது எனக்கு என் குரு ஒருவர் உரைத்த உபதேசம். நாம் எப்பொழுதும் உள்ளும் புறமும் விழிப்புடன் இருப்பது அவசியம். காரணம் பல நேரங்களில் நாம் ஏதாவது செய்ய விளைகையில் அல்லது அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நம் மனதிடம் கவனம் வைப்பதில்லை. எனவே நமக்கான செய்தி எதுவாயினும் அது புற உலகத்திடம் இருந்து வருகிறது.

அது எப்படி புற உலகத்திடம் இருந்து வரும் என்ற கேள்வி என்னை எட்டுகிறது. நானும் என் குருவிடம் கேட்க்காமல் இல்லை. அவர் கூறிய விஷயம் ஆச்சர்யமானது. நாம் ஒரு விசயத்தை யோசித்துக் கொண்டிருக்கும்போதோ அல்லது பேசிக்கொண்டிருக்கும் போதோ நம்மை கடந்து செல்லும் யாரவது ஒருவர் அவருக்கே தெரியாமல் அவரது சம்பாசனைகளில்  சில வார்த்தைகளை சத்தமாய் உரைத்துவிட்டு செல்ல கூடும், அது நம்மை எட்டும் அளவுக்கு இருக்கும். அதிலிருந்து குறிப்புணர வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் யாரவது ஒருவர் சம்பந்தமே இல்லாமல் வந்து நம்மிடம் எதாவது பேசிவிட்டு செல்வர். நாம் அவரை பைத்தியம் என்று கூட நினைக்க வாய்ப்பிருக்கும். இது பலருக்கு நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நாம் அவைகளின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. இப்படி புற உலகத்தில் வரும் சமிக்கைகைளின் மூலம் பல விஷயங்கள் உணர்த்தப்படுமாம். எனவே புலன்களை திறந்து வை என்பார் அவர். சுற்றி இயல்பாய் நடக்கும் விசயங்களை கவனிக்க தவறுதல் கூடாது.

அது போலத்தான் வெகு சில நேரங்களில் மனம் அமைதியாய் இருக்கும்போது யாரவது எதாவது கேட்கும்போதோ அல்லது நாம் செய்வதை பற்றி சிந்திக்கும் போதோ  சட்டென ஒரு எண்ணம் எழும். அவையும் அப்படித்தான். எனவே எப்பொழுதும் உள்ளும் புறமும் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அன்று தை பொங்கல் இரண்டாம் நாள், பௌர்ணமி. முந்தைய நாள் எனது மகர ஜோதி விரதம் பரிபூரண பூர்த்தி அடைந்ததும், அம்மையப்ப்னும், அய்யப்பனும் என்னை வாரி அனைத்த உணர்வையும் முந்தைய பதிவில் பகிர்ந்திருந்தேன். இன்று மறுநாள் பௌர்ணமி எனது மாத விரத நாள். காலை எழும்போதே எனது இரண்டு மாமாக்களும் என் படுக்கையின் அருகில் அமர்ந்து அன்றைய திட்டம் என்ன என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தனர். நான் கண் விழித்தவுடன் என்னை அவர்கள் இன்று எல்லோரும் எங்காவது சென்று வரலாம். இதுவரை போகாத புதிய இடமாய் இருக்கட்டும், கோவிலாய் இருந்தாலும் சரி என்றனர். சட்டென மனதில் தோன்றியது காங்கேயம் சிவன் மலை, அல்லது சென்னிமலை இரண்டுமே மகன் சுப்பிரமணியர் அழகனான முருகன் அருள் பொங்கும் மலைதான். நினைப்பதற்கு முன் இதழ்கள் உதிர்த்து முடித்திருந்தது. அரைத்தூக்கத்தில் இன்னும் சரியாக கண் கூட விழிக்காத நேரத்தில் எப்படி நான் இதை சொல்லி இருக்க முடியும். சொல்லியானது. அதன் பிறகு நடந்தவைகள்தான் இன்னும் அதிசயம். 

வேறு சில இடங்களையும் அலசி ஆராய்ந்துவிட்டு பின் முடிவு செய்யலாம் என்றனர் இருவரும். குளித்து முடித்து நிதயகர்ம பூஜைகளை நிறைவேற்றி அமர்ந்தபோது, இணையத்தில் அருகிலிருக்கும் சில சுற்றுலா தளங்களை பற்றி விவரம் சேகரிக்க அமர்த்தப்பட்டேன். திருமூர்த்திமலை, பொள்ளாச்சியிலிருந்து சற்று உள்ளே சென்றால் அடர் வனத்தினூடே ஒரு உயிரியல் பூங்கா உள்ளது. இந்திரா காந்தி தேசிய உயிரியல் பூங்கா அது. அடர் காடு, நிறைய மிருகங்கள், எழில் கொஞ்சும் பசுமை, ஏகாந்தமான இயற்க்கை. இவை இரண்டும் தேர்வு செய்யப்பட்டு அதில் உயிரியல் பூங்கா என தீர்மானிக்கப் பட்டது.  மதியம் நெருங்க திடிரென அவர்களுக்கே சந்தேகம் ஒருவேளை இன்று அரசு விடுமுறை என்பதால் அங்கு யாரும் இல்லை என்றால் அத்துனை தூரம் சென்றது வீனாகிவிடாதா?? உடனே உயிரியல் பூங்காவின் தொலைபேசி என்னை இணையத்தில் பெற்று முயன்றால் பதில் இல்லை. அரசு அலுவலகமாயிற்றே அதுவும் அரசு விடுமுறை நாளில். சரி என்ன செய்வது என்று முடிவு செய்ய மீண்டும் பேச திருமூர்த்தி மலை செல்லலாம் என்றனர். சரி என்றேன். இரு சகோதரிகளும் கிளம்ப சற்று நேரம் ஆயிற்று. இறுதி பத்து நிமிடத்தில் மாமா கேட்டார் அங்கு சென்றாலும் மாலை நெருங்குவதால் சரியாக வராது என்றார். என்ன செய்வது. எல்லோரும் கிளம்பியானது. சரி காரில் ஏறுங்கள் எங்காவது செல்வோம் என்று கிளம்பி நேராக பல்லடம் உடுமலைபேட்டை சாலையில் உள்ள சித்தம்பலம் என்னும் இடத்தில் அமைத்துள்ள நவகிரக கோட்டைக்கு சென்றோம். அது ஒரு தியான மண்டபம். எல்லா ராசிகளும், நட்சத்திரங்களும் வட்ட வடிவில் வீற்றிருக்க மிக பிரம்மாண்டமான லிங்க ரூபம் மத்தியில் அமைந்திருக்கும். ரம்மியமானதொரு இடம். அமைதியான சூழலில் அமைந்த அற்புதமான தியான மண்டபம்.


அதற்க்கு முன் வீட்டிலிருந்து கிளம்பும் முன்பே தந்தை கூறியது ஒரு வேலை நீங்கள் சிவன்மலை சென்றால், அங்கிருந்து சென்னிமலை செல்வது எளிதாக இருந்தால் சென்று வாருங்கள் என்று. தியான மண்டபத்தில் ஒரு சில மணித்துளிகள் அந்த ஆதியோடு ஐக்கியமாகி அந்த இடத்தின் தெய்வீக தாக்கத்தில் கலந்திருந்துவிட்டு, பல்லடம் வந்து என்னை தவிர்த்து மற்றவர்கள் மதிய உணவு முடித்தார்கள். அங்கிருந்து காங்கேயம் செல்லலாம், இப்போது மணி 3 கிளம்பினால் மாலை நடை திறப்புக்கு செல்ல சரியாய் இருக்கும் என முடிவெடுத்தோம்.
வண்டி நேராக காங்கேயம் சாலையில் விரைந்தது. கோவிலின் அடிவாரம் நெருங்கிய போது ஒரு எண்ணம், படியில் செல்லலாம் என்று. மற்ற அனைவரையும் காரிலேயே மேலே வர சொல்லி நானும் என் சகோதரியும் மகன் மட்டும் படி வழி ஏறினோம். எனக்கு படியில் செல்லவேண்டும் என்று தோன்றியதன் காரணம். மன ஒருநிலைப்படுத்த, தியானம் கிட்ட. ஆம் மலையில் கோவில் அமைத்ததற்கு இன்னொரு காரணம் இதுவாகக் கூட இருக்க்கலாம். பொதுவாக நாம் தியானத்தில் அமரும் பொழுது மனது அங்கு இங்கென்று அலை பாயும். ஆரம்ப காலங்களில். அப்பொழுது அதை இழுத்து கட்ட நாம் உபயோகிப்பது எதுவென்று நாம் அறிந்ததே. மூச்சு. அதை சற்று அழுத்தமாக உள்ளிழுத்து வெளியேற்றினால் சிதறிய எண்ணங்கள் புருவ மத்தியில் வந்து சேரும். இது மலை ஏறும் பொழுதில் இயல்பாய் அமையும். மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றி மலையேறும் சமயங்களில் அங்கு ஒரு தியானம் நிகழத் துவங்குகிறது. எண்ணங்கள் குவியத் தொடங்குகிறது. பௌர்ணமி விரதம், மாலையில் அம்மையப்பனை காண கோவில் செல்வது வழக்கம், அதற்க்கு முன்பு சிறிது நேரம் தியானம் செய்ய முடிந்தால் மிக்க மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தது. படி வழி சென்றேன். மேலே சென்று சுற்றி வரும் வழியில் அம்மையப்பனை தரிசித்தேன் மெய் சிலிர்த்தேன். உள்ளே பிரகாரம் சென்று நாங்கள் பூஜை பொருட்களை தந்த அர்ச்சகர் வர  காத்திருந்தோம். எங்கு சென்றாரோ சற்று நேரமானது அவர் வர. தீப தரிசனம் முடிந்த நேரம், அங்கு அபிசேக பூஜைக்கு தயாராவதாய் தோன்றியதால் தாமதித்தோம். ஆம் சிறப்பானதொரு அபிசேக பூஜை  தரிசனம் தந்தார் சிவன்மலை அழகன் முருகன். வெளியே வந்து காரின் அருகில் வந்த பொது எங்களுக்கு பின் மயில் வாகனன் தரினம் தந்தார். முருகன் கோவிலில் மயிலின் தரிசனம் அற்புதமானது. எல்லோருக்கும் கிடைக்கபெறாதது. திருப்பம் வரை வந்த பொழுது முழு நிலவின் தரிசனம். என்னை பொறுத்தவரையில் அது அம்மையப்பனின் தரிசனம். அம்மாவின் அற்புத ரூபம். நான் விரதம் துடங்கி இன்றுவரை ஒரு பௌர்ணமி நாளிலும் சில வினாடிகளேனும் தரிசனம் கிட்டாது இருந்ததில்லை. மேகங்கள் சூழ்ந்து, மலை பெய்துகொண்டிருக்கும் நாட்களிலும் கூட அவர்கள் எனக்கு தரிசனம் தராது இருந்ததில்லை. 


இம்முறை சிவன்மலை உச்சியில் நின்று சிவசக்தி தரிசனம் காண்கிறேன். அத்துனை மகிழ்ச்சி. ஆழ்ந்ததொரு அமைதி சொல்லாமல் வந்து தொற்றிக்கொண்டது. அகமகிழ்தேன். என் இடையிழந்தேன். அவ்வளவு தளர்வாய் உணர்ந்தேன் நான். பூரண தரிசனம் கிடைக்கப்பெற்றேன் எனலாம். சட்டென தந்தை கூறிய சென்னிமலை நியாபகம் வர அருகில் நின்றிருந்த வாடகை கார் ஓட்டுனர் ஒருவரிடம் இங்கிருந்து சென்னிமலை செல்ல வழி இருக்கிறதா, எத்தனை தூரம், நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்ற விவரங்களைக் கூறி கேட்டேன். அவர் இங்கிருந்து செல்வது எளிதுதான் திரும்ப உங்கள் தளத்திற்கு செல்ல வேறு பாதை உள்ளது என தெளிவாய் கூற. எங்கள் பயணம் சென்னிமலை நோக்கி திரும்பியது. மாலை வெகு நேரம் ஆகிவிட்டதாலும் சிவன்மலையை விட சற்றே உயரமான செங்குத்தான மலை என்பதாலும் இம்முறை காரிலேயே மேலே சென்றேன். எத்துனை அற்புதமான தரிசனம் அது. அதிக கூட்டம் இல்லை. அழகன் முருகன் என்பதற்கு சாட்சியாய் இயல்பான அழகுடைய முருகன் சிரிப்பால் வரவேற்றார். இங்கும் அதே அனுபவம். தரிசனம் முடிந்து வெளியே வந்த பொழுது எங்களுக்கு எதிர்புறம் ஒரு சிறு கூட்டம் அபிசேக பொருட்களுடன் சென்றனர். விசாரித்தபோது, பௌர்ணமி பூஜை என அறிந்து திரும்ப உள்ளே சென்றோம். எத்தனை அலாதியான அனுபவம் அது. அங்கு அழகன் முருகனுக்கு அபிசேகம் நடக்க, ஒரு சிறு கூட்டமே அழகான தமிழில் இனிமையான ராகத்தில் ஒரு சேர கந்த ஷஷ்டி கவசமும், கந்தகுரு கவசமும் பாட, இந்த அன்பு கலந்த பூஜையில் கலந்துகொள்ள என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும் என் எண்ணிக்கொண்டேன். அங்கும் அபிசேகம் முடிந்து கிளம்பி வீட்டிற்கு வர இரவாகி விட்டது. அன்று காலை முதல் நடந்த விசயங்களையும் அனுபவங்களையும் பார்க்கும் பொழுது, என்ன நினைப்பது. எல்லாம் அவன் செயல். ஒவ்வொரு தருணத்திலும் எல்லாம் வல்ல இறைவன் நாம் என்ன செய்ய வேண்டும், எங்கு இருக்க வேண்டும், எது நமக்கு கிடைக்கப் பெற வேண்டும் என நிச்சயத்து வைத்திருப்பது தெளிவாய் புரிகிறது.
வாழ்வது மட்டுமே நமது கடமை. வாழ்விப்பது அவன் செயல். எண்ணங்கள் மிக மிக முக்கியமானவை. எதை எடுப்பது எதை விடுவது என்பது அதனினும் முக்கியம். அதை எப்படி அறிவது என்றால். புலன்களை திறந்து வைக்க பழக வேண்டும். தியானத்தில் புலன்களை முடிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மற்ற நேரத்தில் புலன்களை திறந்திருப்பது. உள்ளும் புறமும் விழிப்புடன் இருக்கும் பொழுது நாம் ஒவ்வொன்றையும் தெளிவாய் புரிந்துகொள்ள முடியும். இது எனது அனுபவம் மட்டுமே. உங்கள் அனுபவம்கள் முற்றிலும் வேறுபட்டவைகளாக இருக்கலாம். 


எதுவாயினும் ஒன்று நிச்சயம். எல்லாம் அவன் செயல். நம் சனாதான தர்மமும், இந்து மதமும் எத்தனை எத்தனையோ ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது. எதாவது ஒன்றிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளை நம்புகிறீர்களோ, இல்லையோ அதை முழுமையாக செய்யுங்கள். அதைத்தான் சனாதான தர்மம் தெளிவாய் உரைக்கிறது. உங்கள் நம்பிக்கை எத்தனை உறுதியானதோ அத்தனை அனுபவங்களை அது உங்களுக்கு வாரி வழங்கும். இங்கு நாம் வெறும் கருவிகள் என்பதை தெளிவாய் உணர்த்தும். ஒவ்வொரு கணமும் வாழ வேண்டியவை. எச்செயலும், எப்பொருளும், எந்த சூழ்நிலையும் இங்கு காரணமின்றி நிகழ்வதில்லை. 

சம்போ மகாதேவா!!! 

எல்லாம் நிறைவாகட்டும். சுயம் காண விழிப்படைவோம்.

எண்ணம், செயல் மற்றும் அதன் விளைவு இதில் எது நமது?? பாகம் - 1

நமக்கெல்லாம் ஒரே எண்ணம் தான், இங்கு நடப்பவை அனைத்தும் நமது விருப்பங்கள், நான் தான் எனது வாழ்வை தீர்மானிக்கிறேன், நான் இதை செய்தேன் அதை செய்தேன் என்று கொக்கரித்து கொள்வதிலேயே வாழ்க்கை முழுமையுற்றதாய் நம்பிவிடுகிறோம். எல்லாம் கடந்து சிந்திக்கையில் எது நமது, எண்ணமா? செயலா? அல்லது அதன் விளைவா?? எது நம்மை சார்ந்துள்ளது. எதை நாம் செய்துவிட்டோம். சற்றே நம்மிலிருந்து விலகி நின்று நடப்பவற்றின் சாட்சியாக நின்று பார்க்கும் பக்குவம் எத்துனை பேருக்கு கிடைத்திருக்கும். அல்லது ஒரு விஷயம் நிகழ்ந்தேறிய பின் அது நடக்க அல்லது நடத்த நம்மால் நினைத்த நேரத்தில் இருந்து அதனுடனான தொடர்பியல் ஆயத்த செயல்களைக் குறித்து சிந்தித்து அது எவ்வாறு நடந்தது என்று சீர் தூக்கி பார்க்கும் பொறுமை எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும். இது இரண்டில் ஒன்று கிடைக்கப் பெறினும் பெரும் பாக்கியம் செய்தவர்களாவோம்.

ஆம் இன்றைய அவசர கதி வாழ்வில் யாருக்கும் எதற்கும் நேரம் என்பது கிடையாது. எதிலும் முழுமையாகவும் ஈடுபாடு கிடையாது. ஏதோ எல்லோரும் செய்வதை செய்துகொண்டு சென்று கொண்டிருக்கிறோம். ஊரோடு ஒத்து வாழ்வதாய் வாழ்வோடு ஒவ்வாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.



எனக்கு இவ்வாய்ப்புகளைபற்றிய படிப்பினைகளைக் கொடுத்த என் குருமார்களுக்குமுதல் நன்றிகளைக் கூறி இந்த பொங்கலுக்கான எனது அனுபவத்தை பகிர்கிறேன். எல்லாம் அவன் எங்கும் அவன் உள்ளும் புறமும், சொல்லும் செயலும், என் எங்கும் அவன் செய்ததே, செய்வதே. அதை மாற்ற நாம் யார்.






வழக்கமாக பொங்கல் அன்று காலை முதல் வேலையாக அப்பனின்சன்னதி சென்று தரிசித்து, பின் அதற்க்கு நேர் எதிரில் அமைந்திருக்கும் அங்காளம்மன் திருக்கோவில்(திருப்பணி நடப்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவும் பகலும் வேலை அற்ற வேளைகளிலெல்லாம் அங்குதான்)  செல்வது வழக்கம். இம்முறை சிறியதொரு மாற்றம் அப்பனை காண செல்லவில்லை. அம்மாவின் தரிசணம் முடித்து நேரே வீட்டிற்கு வந்து, உடனடியாக என் நெருங்கிய நண்பன் வீட்டிற்கு சென்றாக வேண்டிய சூழல்.

வந்தவுடன் கிளம்பியானது. இருவழிகளில் செல்ல வாய்ப்புள்ளது, ஒன்று தேசிய நெடுஞ்சாலை மற்றொன்று புறவழிச் சாலை. எது சுலபம் என்று சிந்தித்தவாறே சென்று கொண்டிருக்கையில் புறவழிச் சாலைக்கு சில மீட்டர் தூரம் முன்பு எனக்கு இடதுபுறம் சாலையின் ஓரம் நின்றிருந்த ஒரு வாகனத்தில் இடதுபுறம் திரும்பும் குறிப்பு விளக்கு எரிந்தது. எனது குரு ஒருவர் சகுண சித்தி பற்றி என்னிடம் கூறி உள்ளார். பல நேரங்களில் நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் உயிரும் நமது செயல்களுக்கான சரியான முடிவினை சகுனங்களாக கூறிக்கொண்டே இருக்கும், அதை உணர்ந்துகொள்ள தனி கவனம் தேவை. எப்பொழுதும் என்ன செய்துகொண்டு இருந்தாலும் நமது சுற்றம் மீதான கவனமும் அவசியம். இது எனக்கு தரப்பட்ட படிப்பினைகளில் ஒன்று. நின்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தில் சட்டென குறிப்பு விளக்கு எறிந்தவுடன் முடிவானது எனது பாதை. இடது புறம் புறவழிச் சாலை வழி திரும்பியானது.

நேரே நண்பனின் வீட்டிற்கு செல்வதாய்  முடிவு. திரும்பி சில நிமிடங்கள் ஆயிருக்கும். எப்படி நான் செல்ல வேண்டிய பாதை தாண்டி அத்தனை தூரம் வந்தேன், அதும் முதல் திருப்பத்தில் திரும்ப வேண்டிய நான் அதிலிருந்து மூன்று மைல் தூரம் கடந்து மூன்றாவது திருப்பத்தை எப்படி நெருங்கினேன் இடையில் என்ன நேர்ந்தது. வேறு யாரவது உடனிருப்பின் பேசிக்கொண்டே மறந்து சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது, தனியே செல்லும்போது பாதை தவிர்த்து எனது கவனம் மாறியதில்லை. என்ன நேர்ந்தது இம்முறை. அவ்வழி எனக்கு புதியதும் அல்ல, பல ஆண்டுகளாக பலமுறை பயணித்த வழி அது. சட்டென சுதாரித்த போது  நான் நெருங்கிக் கொண்டிருந்தது அருள்மிகு தேனீஸ்வரர் ஆலயம் செல்லும் திருப்பம். ஊரின் துவக்கத் திருப்பம் செல்ல வேண்டியவன் அதே ஊரின் இறுதி திருப்பம் சென்றடைந்தேன். சட்டென உள்ளே உரைக்க நேரே அதிலேயே திருப்பி விட்டேன். சமயம் உச்சி வேளை 12.30 வழக்கமாக நடை சாத்தும் நேரம். ஊருக்குள் புகுந்து 2 மைல் செல்ல வேண்டும். மித வேகத்தில் இருந்து சற்றே வேகத்தை கூட்டி எப்படியேனும் அப்பனை தரிசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பறந்தேன். வழியை அடைத்து மேடையிட்டு பொங்கல் விழா நடத்திக் கொண்டிருந்தனர்.

வேறு வழியும் எனக்கு தெரியாது. அங்கு இருந்த பெரியவரிடம் வழி கேட்கையில் ஒரு கார் எனைக்கடந்து அருகிருந்த குறுக்கு சந்தில் சென்றது. அதன் பின்னே செல்ல சொன்னார் அந்த பெரியவர். மிக குறுகிய சாலை என்பதால் கார் ஆடி அசைந்து மெதுவாகவே சென்று கோவிலுக்கு செல்லும் பாதைக்கு சற்று முன்பாக பிரதான சாலையை அடைந்தது. அங்கிருந்து கோவிலை நெருங்கும் நேரத்தில் பிரதான ராஜகோபுர வாயிலின் ஒரு கதவு மூடப் பட்டிருந்தது. இது கோவிலின் நடை அடைப்பதற்கான அடையாளம். வெளியிலிருந்து வருபவர்கள் தூரத்திலே கண்டு கொள்ளலாம் மூலவர் சன்னதி அடைக்கப் படுகிறது என்று.

வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக ஓடினேன். உள் நுழையும் வரைதான் அவசரகதி எல்லாம், அது என்னவோ கோயிலுக்குள் சென்றுவிட்டால் மனம் சற்றும் சலனப்படுவதில்லை. நேரே சென்று விநாயகரை வழிபாட்டு, தட்சிணாமூர்த்தியைக் கண்டு, லிங்கோத்பவர் முடித்தால் அவரின் எதிரில் பஞ்ச லிங்கேஸ்வரர் அமர்ந்திருப்பார். பிரம்மாண்ட வெண்ணிற லிங்கம். எப்போது சென்றாலும் அருகிலுள்ள வில்வ மரத்தில் சில இலைகளை பறித்து ஆத்மார்த்தமாக தியானித்து அர்ச்சிப்பது பழகிப்போன விஷயம் என்பதால். அதையும் தவிர்க்க முடியவில்லை. மெல்ல சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், துர்க்கை என எல்லாம் கடந்து நந்தி தொழுதெழுந்து சன்னதி நெருங்கும் பொது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சன்னதி நுழைகையில் வேறு யாரும் இல்லை அங்கு. அர்ச்சகர் புன்முறுவலோடு வரவேற்றார். சன்னதியில் நின்று தேனீஸ்வரரை கண்ட நிமிடம் என்னுள் ஏதோ அதீத மாற்றம். மிக மிக மென்மையாக உணர்ந்தேன். உள்ளிருந்து எதோ ஒன்று பொங்கி தொண்டைவரை வந்து நின்றது. மென்மையான விம்மல். சிவபுராணத்தின் சில வரிகளைப் பாடி, எல்லாமாகிப்போன ஈசனைப் போற்றி நிற்கையில் மூலாதாரம் தொடங்கி மேல்நோக்கிய ஒரு நெருடல். உச்சியில் சகஸ்ரகாரத்தில் ஒரு மெல்லிய உணர்வு.

தியான நேரத்தில் கிடைக்கும் ஒரு பேரின்பம். அங்கு சன்னதியில் பெற்றேன் நான். அப்பனைக் கண்குளிரக் கண்டு, அருகில் அம்மனின் சன்னதியில் வஜ்ராசனம் இட்டு சில நிமிடம் தியானித்து வெளியில் கிளம்ப அம்மன் சன்னதி அடைக்கப் பட்டது. அப்பனின் சன்னதி வழியாக வெளியே வந்து மற்ற சுற்று தெய்வங்கள் தொழுது கோவிலை விட்டு வெளியே வந்தவுடன் நடை அடைக்கப் பட்டது. இதற்க்கு எல்லாம் என்ன காரணம். எப்பொழுதும் நடை அடைக்கும் நேரம் அவசர தொனியில் இருக்கும் அர்ச்சகர் அத்துனை பொறுமை காத்தது ஏன்.? என்னை அங்கு கொண்டு நிறுத்தியது யார். நிச்சயமாய் நான் அங்கு செல்லும் எண்ணம் கொண்டிருக்கவில்லை.

ஏதோ ஒரு சக்தி எல்லாம் நிகழ்த்துகிறது. நிகழ்வுகளின் கருவியை இருக்கிறோம் நாம் என்ற எண்ணம் இன்னும் இன்னும் அழுத்தமாக மூளையின் எல்லா செல்களிலும் பதிக்கிறது அந்த சக்தி. அதை நான் அழைக்க விரும்பும் நாமம் சிவம். சர்வம் சிவமயம். அவனின்றி ஓரணுவும் அசையாது.

அனுபவங்கள் பல பாடங்களை கற்றுகொடுக்கிறது. பாடங்கள் நமது தேவைக்கும் தேடலுக்கும் தொடர்புடையதாய் அமைகிறது. தேவை என்பது நமது விருப்பம் அன்று, நமக்கு இவ்வாழ்க்கை வழங்கப் பட்டதர்க்கான நோக்கம் நிறைவேற என்ன தேவையோ அதுதான் வாய்க்கும். மற்றவை மணல் வீடுகள்தான்.

பொங்கலன்று மகர ஜோதியும் கூட கார்த்திகை முதல் தேதியில் தொடங்கிய என் விரதம் அன்று முடிவு. அப்பனும் அய்யனும் பேரருள் கொண்டு என்னை அணைப்பதை உணர்ந்தேன்.

தை இரண்டு - மாட்டு பொங்கல். பௌர்ணமி. அன்றும் எனதனுபவம் மிக அருமையானது. அடுத்த பதிவில். 

தேடலின் விடை – 2



ஞானாலய வள்ளலார் கோட்டம் ஏற்பாடு செய்திருந்த தியானம் ஒரு அறிமுகம், அரங்கத்தில் வெகுசிலரே இருந்தனர். தேடல் உள்ளவர்கள் அதிலும் சிலரே. அங்கு சென்றது இமய ஜோதி திரு ஞானானந்தா சுவாமிகளின் உரையைக் கேட்க. அத்தனை அன்பு அதில் ததும்பும். அத்தனை இன்பம் அதில் பெருகும். அத்தனையும் தேடலை இன்னும் தூண்டும்.
மதியம் உணவு இடைவேளை கடந்து எங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார், பிறகு உகார, சிகார மற்றும் ஆஞ்ஞா இயக்கங்களை தியானத்தில் உணர்வதை விளக்கினார்.
அமைதியாக இருந்து பெறுவது மட்டுமல்ல தியானம், அது ஒரு இயல்பு, அதை யாருக்கும் யாரும் கற்றுக்கொடுக்க முடியாது, கற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்பவன் ஏமாற்றுகிறான், ஏமாந்து விடாதீர்கள் அன்பர்களே. தன்னை தன்னிலமையில் அறிவதே தியானம். அறிந்துகொள்வோம் தியானத்தை அனுபவிப்போம்.
அமர்ந்து கொண்டு கண்களை மூடி, நாசியில் போகும் காற்றை இடகலை பிங்கலை சுழிமுனை என்று கவனிப்பது மட்டுமல்ல தியானத்தின் துவக்கம். இசையும் நடனமும் கூட தியானம்தான்.
ஆம் சிவனின் தாண்டவங்களை பற்றி நிறைய வாசித்தும், பார்த்தும் இருக்கும் நமக்கு நடனம் என்பது மனித இயல்பு என்பது கடுகளவேனும் நினைவிருப்பின் ஆடுவதற்கு நாம் தயங்க மாட்டோம்.
சுவாமிகள் தொடர்ந்தார், இனி நாம் சற்று நேரம் இயல்பாய் இருப்போம். அனைவரும் அவரவர் இடங்களில் சற்று இடைவெளி விட்டு நின்று கொள்ளுங்கள், கண்கள் மூடி இருக்கட்டும், புற உலகை மறந்தால் மட்டுமே மனிதன் அவனின் அகத்துள் பயணிக்க முடியும். இசை ஒன்று ஒலிபரப்பப்படும், அதில் வரும் இசைக்கு தகுந்தாற்போல் முதலில் சற்றே அசைந்து கொடுங்கள் அது மட்டும் போதும் மற்றவை தானாய் நடக்கும் என்றார்.
கூச்ச நாச்சங்களை வெளியே எறிந்துவிட்டு உன்னுள் ஏற்படும் அதிர்வுகளை மட்டும் கவனித்து அது உன்னை இயக்க அனுமதி.
இசை பரவத் தொடங்கியது, மெலிதாய் மிக அழகாய் மெல்லிய அதிர்வுகளுடன் துவங்கியது, மெல்ல அசைந்து கொடுத்து உள்ளுக்குள் தோன்றும் அதிர்வுகளை உன்னிப்பாய் கவனிக்க அது மெது மெதுவாய் இசையுடன் கலந்து என்னையும் அதனுள் இணைத்து அசைக்கத் தொடங்கியது. இசையோடு கலந்து கலந்து அதில் கரைந்து கரைந்து அந்த இசையாய் மாறித்தான் போனேன். 


அவனின்றி ஓரணுவும் அசையாது, ஆதி இறைவன் சிதைவடிவில் இருந்து மட்டும் அருள் பாலிப்பது இல்லை, அது நாம் ஏற்றுக்கொண்ட முறையாயினும் ஆதியாய் வந்தவன் ஆதியற்று வந்தவன் அநாதியாய் நின்றவன் அகண்டமாய் நின்றவன் இங்கங்கு எனாதபடி எங்கும் நிறைந்தவன் அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் நின்றவன் என் அணுக்கள் எங்கும் நிறைந்திருக்கிறான் என்றால் அது மிகையாகது.
இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் அவனின் நடனம், ஆம் அணுக்களை இயக்க அதனுள் இயக்கமாய் இருக்கும் ஆதிமூலம் அவன், அவன் ஆட ஆட அணுக்கள் அதிர, அதிர்வுகள் தொடர பிரபஞ்சம் இயங்குவதை எவர் மறுக்க முடியும். 

அப்படி எங்கும் நிறைந்த இறை என்னுள்ளும் இருக்கிறன், அந்த இசையில் முழுமையாய் நான் கலந்த வேளை, என்னை நான் மறந்து, நான் என்ற பதம் மறந்து உடல் மறந்து அந்த இசையாய் நான் மாறிய வேளை இறைவன் என்னுள் ஆனந்தக் கூத்தாடத் தொடங்கினான்.
அவனின் ஆடலில் மெய்யும் சேர்ந்தாடியது, இசையின் வேகம் கூட கூட, அதிர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அவனின் ஆட்டமும் அதிகரித்தது. பேரானந்தப் பெருவெளியில் மிதந்தேன் நான். இசை உச்சத்தை தொட்ட நேரம் புராணங்களில் கூறப்பட்டதைப் போல் நாதனின் தாண்டவங்களை ஒத்த ஒரு அதிர்வை உணர்ந்தேன். 

எல்லாம் முடிந்து இசை நிறுத்தப்பட்ட வேலையில் நாங்கள் அப்படியே இருக்கும் இடங்களில் கண்களை திறக்கமம் அமர அறிவுறுத்தப்பட்டோம். அப்படியே நாம் முன்னுணர்ந்த தியான நிலையை இப்போது தொடரச்சொன்னார், அமைதியாய் நாசியில் ஓடும் காற்றை கருத்தில் நிறுத்தி உடலில் உள்ள அதிர்வுகளை உணர சொன்னார். நிச்சயம் இது ஒரு அலாதியான முறைதான்.
எப்பொழுதும் எழிமையாய் செய்யும் தியான முறையுடன் நடனமும் கூட அது இன்னும் அலாதியான பேரின்பத்தை, நிலைத்தன்மையை நம்முள் விதைக்கிறது. உடலும் மனமும் மிக மிக தளர்வாய், அதிகமான அதிர்வுகளை உணர முடிந்தது என்னில்.
இறைவனின் இருப்பை ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்தேன் நான். பின் நிதானமாக சற்று நேரம் படுத்துக்கொள்ள அனைத்து அணுவும் இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனை இன்பம் அதில்.. 

நிச்சயம் நடனம் ஒரு தியானம்தான். அதைத்தான் நம் முன்னோர்கள் ஈசனின் தாண்டவங்களாய் நமக்கு போதித்து சென்றுள்ளனர். எல்லா மனநிலைக்கும் ஏற்றது நடனம். ஆனால் அது எல்லா இடத்திலும் சாத்தியமில்லை என்பது உண்மை.
இதை அனுபவித்து வெகு சில நாட்களில் ஓஷோவின் குண்டலினி தியான முறை பற்றி அறிந்து கொண்டது இன்னும் பயனளித்தது.
அதை அவர் நான்கு நிலைகளாய் விளக்குகிறார்.
இது ஒருமணி நேரம் செய்யக்கூடியது. நமது அறைக்குள் நல்ல இட வசதி உள்ளது போல். காரணம் நீங்கள் இசையோடு ஒன்றும் போது தடை ஏதும் இருக்க வேண்டாம்.

முதல் நிலை: முதல் பதினைந்து நிமிடம் நின்று கொண்டு உங்கள் உடல் முழுவதும் அதிர்வுகள் பரவ அனுமதியுங்கள், உடலின் எல்லா பகுதிகளையும் நன்கு குழுங்கும்படி அசைவுகள் கொடுங்கள். உதறுங்கள், குழுங்குங்கள்.

இரண்டாம் நிலை : இரண்டாம் பதினைந்து நிமிடம் அடுத்த இசையோடு சேர்ந்து ஆடுங்கள், இயல்பாய் எப்படி எல்லாம் ஆடத் தோன்றுகிறதோ, அப்படி எல்லாம், எல்லாம் இடத்திற்கும் நகர உங்களை நீங்கள் அனுமதியுங்கள், உங்களுக்கும் இசையை செலுத்தி உங்கள் அணுக்கள் அதற்க்கு ஆட அதை அப்படியே உடல்வழி வெளிப்படுத்துங்கள். 


மூன்றாம் நிலை : மூன்றாம் பதினைந்து நிமிடங்கள் அமைதியாய் அமர்ந்து உள்ளும் புறமும் உங்களுக்குள் ஏற்படும் அதிர்வுகளை அப்படியே அனுபவியுங்கள், சாட்சியாய் மட்டுமே இருங்கள், வேறேதும் செய்ய வேண்டாம்.  அதை உணர்ந்தனுவிக்கும் போது நிச்சயம் ஒரு மாற்றத்தை உணர முடியும்.
நான்காம் நிலை : இறுதி பதினைந்து நிமிடங்கள் அப்படியே தரையில் கை, கால் மற்றும் உடலை தளர்வாய் விட்டு அசைவற்று படுக்கவும். எந்த எண்ணமும் வேண்டாம். இசையில் மட்டும் நாட்டத்தை செலுத்துங்கள். உங்கள் உடலை இசையாய் மாற்றுங்கள். கலந்து கரைந்து போங்கள். இதில் கிடைக்கும் அனுபவம் என்ன என்பது உணர்ந்தனுபவிக்கும் போது தான் புரியும்..
அனைத்து நிலைகளுக்குமான இசையை நீங்களே  தேர்ந்தெடுக்கலாம் தியானத்திற்கு ஏற்றார்போல், அல்லது  அவற்றிற்கான மாதிரிகளை நீங்கள் இந்த முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் www.oshoosho.com  .

இறையை தன்னுள் உணர நிச்சயம் நாம் இயல்பில் இருத்தலில் மட்டுமே முடியும்.
இயல்பில் இருப்போம், இறைவனை உணர்வோம்.
எல்லாம் நிறைவாகட்டும்.
சம்போ மகாதேவா..

வாழ்க்கை ஒரு தொடர் (கல்வி) தேடல்.

இன்றைய தினம் நான் வாழ்த்த நினைத்தவர்களை எல்லாம் இல்லை வாழ்த்த வயதில்லை மானசீகமாக வணங்க நினைத்தவர்களை மானசீகமாக காலையிலேயே வணங்கிவிட்டாலும், எழுத நினைத்ததை எழுதாமல் உறங்க முடியாது போலும்.. இன்று கல்லூரியில் சற்று வழக்கத்துக்கு மாறாக பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடக்கும் ஒவ்வொரு மாணவ மனைவியின் ஆசிரியர் தின வாழ்த்துக்களை பெற்று நன்றிகளை சொல்லி நகர்கையில், ஏதோ ஒன்று மனதின் ஓரத்தில் உறுத்தத்தான் செய்தது. இவர்களுக்கு எதை நான் கற்றுக்கொடுத்து விட்டேன். வாழ்வியலின் அடிப்படையேனும்?? கணிப்பொறியின் பரிணாம வளர்ச்சியும், பயன்பாடும், மென்பொருள் எழுதும் மொழிகளின் பரிட்சயமும் இவர்களை மனிதர்களாக, வாழ்க்கையை புரிந்தவர்களாக ஆக்கி விடுமா என்ன?? நிச்சயம் இல்லை. சற்றே பின் நோக்கி நகர்ந்து என் வாழ்விலும் நான் மாணவனை இருந்த போது என் ஆசிரியர்கள் எனக்கு எதை எப்படி கற்றுத் தந்தார்கள் என்று பார்த்தல், பெரும்பாலானவர்கள் அதையே தான்  செய்திருக்கிறார்கள்.
 
 எத்தனை ஆசிரியர்களை நாம் நினைவில் கொண்டிருக்கிறோம்.. ஆண்டுகள் கடந்த பின்னும் எவரேனும் நம் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார் எனில் நிச்சயம் அவர்கள் பாட புத்தகங்களைத் தாண்டி வாழ்க்கைக்கான புரிதலையும் வழி காட்டுதலையும் சர்வ நிச்சயமாக போதித்திருக்க வேண்டும். அப்பட்டமான உண்மை. எனக்கு படித்த பாடங்களை நினைவிருக்கும் அளவிற்கு, அதை சொல்லித்தந்த பலர் அத்தனை தெளிவாய் என் மனதில் இல்லாமல் போனதற்கு அதுவும் காரணமாய்  இருக்கலாம்.

வாழ்க்கையில் அதை செயலாக்கும்வரை  எந்த ஒரு கல்வியும் முழுமை அடைவதில்லை.

நிதர்சனமான உண்மை, இங்கு போதிக்கப்படும் பாடங்கள் பல வெறும் பாடங்களாகவே இருக்கின்றன, பலதை நாம் உபயோகிப்பதே இல்லை அல்லது அதை வாழ்வில் எப்படி உபயோகிப்பது அல்லது அதன் பயன் என்ன என்பது போதிக்கப்  படுவதில்லை.

கல்வி வெறும் கற்றுத் தேர்வதர்க்கான கட்டமைப்பாக்கப் பட்டதாய் உணர்கிறேன். தேர்வு நிலை தாண்டி அதைப்  பற்றி யாரும் சிந்திப்பது இல்லை.

கற்றுக் கொடுப்பவர்கள் எல்லாம் ஆசிரியர் ஆகிவிடுவதில்லை, நாம் யாரிடம் கற்றுக்கொண்டு அதை வாழ்வில் புகுத்தி உணர்கிறோமோ அவரே நம் ஆசிரியர் ஆகிறார்.

இப்படி எனக்கு அமைந்த சில குருமார்களை இங்கு நிச்சயம் நான் வாழ்த்தி வணங்கியே ஆகவேண்டும்.

எனது தொடக்கப் பள்ளி வாழ்வில், நிச்சயத்து கூற முடியும் நான் வெகு சுமாரான மாணவனாகவே இருந்தேன், அதிலும் தமிழில் என்னை போல் எழுத்துப் பிழை செய்ய யாராலும் முடியாது.

என் ஆசிரியர்களை விட அதிகமாக எனக்கு கற்றுக்கொடுத்தவர் என் அன்னை.

கணிதத்தை எனக்கு நாட்டம் வர என்னை ஊக்கப்படுத்தி போதித்தவர் என் தந்தை.

நடுநிலைப் பள்ளியில் எனக்கு ஆர்வமும், அதே சமயத்தில் துடிப்புடன் எதையும் எதிர்கொண்டு வெல்ல என்னைத் தூண்டியவர்கள், தாமோதிரன் அய்யா, சுதந்திரமணி அம்மா இவர்கள் இருவரையும் வாழ்வுள்ள வரை மறக்க இயலாது. அன்பினால் எதையும் சாதிக்க இயலும் என்று உணர்த்தி, பாடத்துடன் வாழ்விற்கான பால பாடத்தையும் சேர்த்து சொல்லிக் கொடுத்தவர்கள் இவர்கள்தான்.

பின் பத்மாவதி அம்மா, எங்கள் விளையாட்டு ஆசிரியர். நான் வெற்றி பெருகிறேனோ இல்லையோ, அணியை வழி நடத்த, துவண்டு போகும் அணியினருக்கு ஊக்கமளிக்க, தோல்வியின் விழும்பிலும் துவளாமல் நின்று எதிராளியை மிரள வைக்க, தோற்றாலும் அதிலும் வெற்றிக்கான படிகளை கற்றுக்கொள்ள சொல்லிக்கொடுத்தவர். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல வாழ்வில் துவளும் ஒவ்வொரு நொடியுலும் எவ்வளவு உதவும் என்று பின்னாளில் அனுபவம் கற்றுக்கொடுத்தது வேறு கதை.

மேல்நிலை பள்ளிக்காலத்தில் நானே அறியாமல், பள்ளியின் அத்துனை ஆசிரியர்களும் என்மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். பள்ளியின் மாணவர் தலைமை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ தலைமை, இன்னும் எல்லாவற்றிலும் என் பங்களிப்பு இவை எனக்கு கற்றுக் கொடுத்தவைகள் ஏராளம். அங்கு நான் கற்றுக்கொண்டது வாழ்வின் பல இடங்களில் இன்றும் உதவாமல் இல்லை.
என்னை முன்னிலைப் படுத்த படுத்த எனக்கான பங்களிப்பு என்ன, எப்படி அதை அணுக வேண்டும், தலைமை ஏற்றால் தலைக்கணம் வந்து விடக்  கூடாது,  சக மனிதர்களோடு இணைந்து இயங்க வேண்டும். இன்னும் எத்தனையோ பாடங்கள். இதில் பல விசங்களில் எனக்கு முன்னோடியாக இருந்து இன்றும் தொடர்ந்து என்மீது என்பை சொரிந்து வரும் என் பள்ளி கால மூத்த மாணவர் Adalarasu Anbalagan அண்ணாவை இந்நாளில் நினையாமல் இருக்க முடியாது.

கல்லூரி என் வாழ்வை திசை மாற்றிய காலங்கள், எனக்கு பள்ளி தந்த அனுபவம் எவருடனும் எளிதில் பழகுதல், அன்பை பரிமாறுதல் அரசு பள்ளி எனக்களித்த வரம் அது. இருப்பினும் ஆங்கிலம் என்னும்போது ஒரு அரசு பள்ளி அதிலும் தமிழ் வழி கல்வி கற்ற சாதாரண மாணவனை விட பின் தங்கியே இருந்தேன். எனக்கு ஆர்வம் ஊட்டி முதலாம் ஆண்டுடன் ஆங்கிலம் மொழிப்பாடமாக இல்லை என்றாலும் எங்களை ஆங்கிலத் துறையோடு தொடர்ந்து இணைந்திருக்கச் செய்து, அம்மொழியில் திறம் பெறச் செய்த ஆசிரியை Narmadha Ram. மொழியை மட்டுமல்லாது வாழ்வியலையும், பண்பையும், நேர்மையையும் போதித்தவர் இவர்.

கணிப்பொறி அறிவியலை பள்ளியிலிருந்து படித்தாலும், அதில் ஆர்வத்தை ஏற்படுத்தி கற்க கற்க இன்னும் வேண்டும் என்று தேடி ஓடவிடும் மனோநிலையை தந்து, எங்களுக்கு குருவாய் மட்டுமல்லாது நண்பனாய் இருந்து நாங்கள் செய்யும் தவறுகளை பகிரங்க படுத்தாமல் ஒரு தாயன்போடு வழி நடத்திய எங்கள் இளங்கலை துறைத்தலைவர் திரு. Navaneetham Periyasamy அவர்கள் படத்தோடு நின்றுவிடவில்லை. சரியான நேரங்களில் சரியான பாதையை காட்டி, எங்களை வழி நடத்தியவரும் கூட. என்றும் தன்னான் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்து சீர் தூக்கி விடும் மனோ நிலையை கற்றுத் தந்தவர்.

முதுகலையில் சேரும்வரை சராசரி மாணவனாய் இருந்த என்னை, கல்லூரியில் எனது பாடத்திட்டத்தில் முதல் மாணவனை வர என்னை தேற்றியவர்கள் அநேகம் பேர். யாமினி மேம் துறைத் தலைவர், Chitra Ganesan, கீதா மேம், சாமு மேம் இவர்கள் என்னை மாணவனாய் நடத்தியதை விட தம்பி என்று அழைத்த நாட்கள் அதிகம்.


கல்லூரி நாட்களிலும், பின்னாளிலும் என்னை நான் உணர வாழ்வை புரிந்துகொள்ள, இன்றும் என்னை வழிநடத்தும் சிலரை என்ன்னால் சொல்லாமல் இருக்க முடியாது.
காரணம் பாட புத்தகங்களை விட வெளியேதான் வாழ்க்கைக்கான பாடம் விரிந்து கிடக்கிறது என்று வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் உணர்த்தப்பட்டிருக்கிறேன் நான், எனது ஆசிரியர்களாலும், இவர்கள் போல் உள்ள  நண்பர்களாலும். SatheeshBabu Thiruvengadam, Sujith Jayaprakash, Kathir Sujith, Dhanabal Subramanium.

உண்மையான ஆன்மீகம் எதுவென்று எனக்கு உணர்த்தி, அதை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி அதன் உட்கருத்தை உணர்த்தி, வாழ்வதில்தான் வாழ்க்கைக்கான அனைத்து அர்த்தங்களும் புதைந்து கிடக்கிறது என்ற தத்துவம் உணர்த்தி, என்னை மெய் ஞானம் தேடி நடை பயிற்றுவித்த என் குருமார்கள் Madhusudhanan Podhuval, Dheva Subbaiah,நாராயணசாமி (Teacher @ Vazhum kalai mandram), ஞானானந்தா சுவாமிகள், ஞானானந்த வள்ளலார் கோட்டம்.

இன்னும் எத்தனையோ பேர் தினம் தினம் புது புது அர்த்தங்களை வாழ்விற்கு வழங்கி அதன் மூலம் வாழ்விற்கான சூட்சமங்களை தேடி செல்ல வழி அமைத்து தரும், எனக்கு வாழ்வியலை கற்றுத் தரும், வாழ்வை வளமானதொரு மனோநிலையில் வாழ கற்றுக்கொடுக்கும் ஒவ்வொரு குருவிற்கும் இதை காணிக்கையாக்குகிறேன்.

அவனின்றி ஓரணுவும் அசையாது.

எங்கும் நிறைந்து எல்லையற்றவனாய் இருந்தும்  ஏதுமற்றது போல் சலனமற்று, நிசப்தமாய் ஒவ்வொருவர் வாழ்விற்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கும்,ஏதோ ஒரு வகையில் நம்மை இணைத்து நம் வாழ்வினிர்க்கு அர்த்தமாகிப் போன எல்லாம் வல்ல இறையை. ஆதி குருவாம் சற்குருநாதனின் திருவடிகள் போற்றி.

எல்லாம் நிறைவாகட்டும்.