ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

என் கா(லமே)தலே...

எனைத்  தனக்குரியவனாக்கி
உயிரை சொந்தமாக்கி கொண்டவளுக்கு.,
கரம்பிடித்த நாள் முதலாய்
எனக்காகவென்றே எல்லாம் செய்தாய்,
உனக்கென விருப்பங்கள் இருந்தாலும்
அதை எனக்கென திருத்தி நிகழ்த்திக் கொண்டாய்,
என் எல்லா அசைவுகளிலும் உனக்கான
பங்களிப்பை தந்து என் வாழ்வின் பாதியானாய்,
நம் பிள்ளையை ஈன்ற பொழுதில் 
உயிர் ஒடுங்கி மீண்டெழுந்த தருணம்
நீயும் எனக்கோர் குழந்தையானாய்,
வாழ்வென்றால் மகிழ்வு மட்டுமா
வந்த சங்கடங்கள் மாய விட்டுத்தந்தே
ஓரோர் முறையும் எனை வெற்றிகண்டாய்,
முதன்முதலாய் கண்டபோதே உளம்புகுந்து
உனக்கென உரித்தான அரியனையை
சொந்தமாக்கிக் கொண்டவளே
யாரோவாகி இருந்து வாழ்வில் நுழைந்த
மாத்திரத்தில் நானாகிவிட்டவளே,
என்ன செய்தேன் இதுவரை உனக்காக..
என்ன செய்திருந்தாலும் அது அத்தனையும்
போதாது என்றே மனம் மருவிக்கெண்டிருக்கிறது.
எனக்கு வாழ்வை அள்ளி  அள்ளிக்  கொடுப்பவளே
உனக்கு எதைக் கொடுத்தால் ஈடாகும்.
எனையே கொடுத்தும் இன்னும் இன்னும்
ஏதாவது உனக்குத்  தர உரக்கச்  சத்தமிடும்
மனதிடம் எப்படிச் சொல்வேன்,
ஒருபுறம் நீ அவளுக்காக உருகிக்கொண்டிருக்க
வாழ்வின் வேகத்திற்கு நுரைக்க நுரைக்க
ஓடிக்கொண்டிருக்கும் புத்தி 
அவள் பிறந்தநாளை மறந்ததென்று.
எப்படி மன்னிப்பாய் இந்த 
வெட்கம் கெட்ட புத்தியை. 
காதலால் ஓர் உலகம் செய்து
அதில் யாதுமாகி நீயே நின்று
என் வாழ்க்கையாகி எனை வாழவைக்கும்
என் உயிரான உறவே
இந்நாளும் எந்நாளும் இன்பம் ஒன்றே உனைச்சேர 
எல்லாம் வல்ல இறையவனை 
உனதாகிவிட்ட உயிரதனை 
சமர்பித்தே வேண்டுகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் கா(லமே)தலே...

கருத்துகள் இல்லை: