திங்கள், 30 செப்டம்பர், 2013

நிழலான நினைவுகள் !!

துணையற்ற பயணம்,
அந்தி மாலை, சன்னல் ஓரம்
மலைச்சாரல் காற்றின் தேவானுபவம்,
அரசுப் பேருந்தின்
ஆரவாரமற்ற வேகத்தில்
மெல்லிய சாரலை உள்வாங்கி
உயிர்படர விட்ட வேளை
இரைச்சலைத் தாண்டி
இளையராஜா தன் மெல்லிசையால்
காதலைக்  கனியவிட
சட்டென சுற்றம் கரைந்து
இமைகள் தானாய் மூடிக்கொள்ள
ஏதோ ஒரு சக்தி என்னை
நிகழ்காலத்தில் இருந்து
பழமைக்குள்  இழுத்துச்செல்ல
ஏதேதோ எண்ணங்கள்
என்னில் நிறைந்து நிறைந்து
என்னை என்னுள்ளே
கரைத்துக் கொண்டிருந்தது.
கடந்த கால நினைவுகளில்
காணமல் போவது ஒரு சுகம்,
வலிகள் நிறைந்த ஒரு நித்திய சுகம்.
கண்களின் ஈரத்தை
இமைகள் உணர்ந்த பொழுதில்
சட்டென வெளிப்பட்டேன்.
கன்னங்கள் நனைத்த கண்ணீர்
மெல்லிய தென்றலில் சில்லிட்ட நேரம்
என்னவளின் இதழ்கள் இயம்பிய
ஈரத்தை மீட்டெடுத்து
மீண்டும் அமிழ்த்தியது பழமைகளுக்குள்.
இசையுடன் தொடர்ந்தது பயணம்,
இம்முறை பயணித்தது தனியாய் அல்ல
நான், என்னவள் மற்றும் இளையராஜா.




கருத்துகள் இல்லை: